மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் சட்டவிரோதமாக கழிவுப் பொருட்களை கொட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒப்பந்தகாரர் ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த பௌத்த மயானத்தினுள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதி வீதி நிர்மாண பணிகளை செய்துவந்த ஒப்பந்தகாரர் வீதியை அகழ்ந்த மணல் , கற்பாறைகளை கனகரக வாகனத்தில் கொண்டுச் சென்று சட்டவிரோதமாக கொட்டியுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பாக ஜெயந்திபுர விகாரை விகாராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் நேற்று புதன்கிழமைசென்று மீண்டும் முறைப்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து, அவர் குறித்த மயானபகுதிக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஆட்கள் செய்த கொடூரமான வேலை என தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை வெட்டப்போவதாகவும் புலிகள் என தெரிவித்து வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மயானத்தில் கற்பாறைகள் மணல்களை கொட்டிய வீதி அபிவிருத்தி ஒப்பந்தகாராரை இன்று வியாழக்கிழமை(26) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

