பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது

202 0

பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே, மணல் கடத்தல் விடயத்தை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும், முதல் முதலாக நாடுவது பொலிஸ் நிலையத்தைத்தான். மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் கடமை செய்கிறோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார்.

இன்றைய தினம் (26) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிஸார் இவ்வாறு மந்தகதியில் செயற்படுகிறார்கள் என கூறியதற்கு பதிலளிக்கும்போதே உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

பொலிஸார் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். அதாவது ஒரு திருடனை திருட்டு சம்பந்தமாக கைது செய்ய முயன்றால், அவன் ஒளிந்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைந்திருப்பான். இப்படி பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் உயிரை துச்சமென நினைத்தே இந்த பாதுகாப்புப் கடமையை செயற்படுத்துகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்தல்ல. ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் நாங்கள் கடமையாற்றி வருகின்றோம்.

எனினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. நீங்கள் வேண்டுமென்றால், அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆகவே, பொலிஸார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள்  முன்வைப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என கோரினார்.