கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் யோசனையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

175 0

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா முன்வைத்த யோசனையை லசார்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் ஏனைய கடன் உரிமையாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, ஜப்பான் இணைந்து பரஸ் கழகத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அவற்றின் ஊடாக இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

மறுபுறம் சீனாவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏனைய கடன் வழங்குனர்களின் வேலைத்திட்டத்துடன் ஒத்துப் போவதாக லசார்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சீனாவுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் மத்திய வங்கி ஆளுனரால் சீனா – இலங்கைக்கு இடையில் எட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படை தன்மையுடன் ஏனைய தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 7.7 பில்லியன் டொலரில் 4 பில்லியன் டொலரை முத்தரப்பு கடன் மறுசீரமைப்பின் கீழ் மறுசீரமைப்பதற்கும், எஞ்சிய தொகையை தனிப்பட்ட கடனின் கீழ் மறுசீரமைப்பதற்கும் சீனா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பை விட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்தால் அதன் பயனை தமக்கு வழங்குமாறு தனியார் கடன் வழங்குனர்கள் நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளனர்.

அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதன் மூலம் கிடைக்கும் பயன் ஊழியர் சேமலாப நிதியத்தை மாத்திரமே சென்றடைய வேண்டும் என்றார்.