தீவிரமடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் பலி

276 0

காசாவின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக காசா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜபாலியா அகதிகள் முகாம் அருகில் உள்ள அல் ஷுஹாபா பகுதியில் இருந்த கட்டிடத்தின் மீதான இந்தத் தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மிகவும் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் போர் 17 வது நாளை எட்டியுள்ளது.அடுத்தக் கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் தனது துருப்புகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் காசா மீது ஞாயிற்றுக்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டருந்த நிலையில் லெபனானில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இன்று (திங்கள் கிழமை) அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்த விவரங்களைத் தெரிவிக்காமல் தங்களின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “இந்தப் போரில் ஹிஸ்புல்லாக்கள் இணைவார்களேயானால் அது இரண்டாவது லெபனான் போருக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தவறினை செய்கிறார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடப்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ், “ஹிஸ்புல்லாக்கள் மிகவும் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நிலைமையினை மேலும் தீவிரமாக்குகிறார்கள். நாங்கள் நாளுக்கு நாள் அதிகமான தாக்குதல்களைச் சந்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.