இந்தியா – தூத்துக்குடியில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, டுபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்துக்காக இலங்கையில் அனுமதிபெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, துறைமுக அதிகாரிகளை
மேற்கோள் காட்டி தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 300 பயணிகள் பயணிக்க முடியும் எனவும், இதற்கான கப்பல் இன்னும் 2 மாதங்களில் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் துறைமுக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கொழும்பு – இராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமாரிக்கு இடையே கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாகபட்டினம்-காங்கேசன்துறை இடையே ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல்சேவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

