யாழில் முதன்முறையாக அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா

160 0

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இம்முறை நடத்தப்படவுள்ள அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு டவர் மண்டபத்தின் தமிழ் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நாடக திருவிழா யாழ். வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட யூனியன் கல்லூரியில் எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கலைத்துறையின் மேம்பாட்டிற்காகவும் கலைஞர்களின் கௌரவத்திற்காகவுமே டவர் மண்டப அரங்க மன்றம் செயற்பட்டு வருகின்றது.

 

கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகிற நாடக திருவிழாவை டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த உள்ளோம்.

இங்குள்ள பாடசாலை மாணவர்களின் நாடகத் திறமைகளையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காகவும் அபேக்‌ஷா யாழ். தமிழ் நாடகத் திருவிழா எனும் தொனிப்பொருளில் முதற்தடவையாக இவ் நாடக விழா இம்மாதம் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை யாழ். யூனியன் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.

இதில் யாழ்ப்பாணத்திலுள்ள கல்வி வலயங்களில் நாடகமும் அரங்கியல்துறை ஆசிரிய ஆலோசகர்களையும், இப்பாடத்தினை கற்பிக்கின்ற ஆசிரியர்களையும், உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினைக் கற்கும் மாணவர்களை் உட்பட துறைசார்ந்த அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

யாழில் முதன்முறையாக அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா | Apeksha Tamil Drama Festival First Time In Jaffna

 

இங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நாடகத் திருவிழாவில் டவர் மண்டப அரங்க மன்ற பாடசாலை மாணவர்களின் நாடகங்களும் வலிகாமம் பிரதேசத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடக ஆசிரியர்களினது நாடகங்கள் உட்பட நாடக ஆளுமைகள் பலரதும் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட இருக்கின்றது.

இங்குள்ளவர்ளிற்காகவே டவர் மண்டப அரங்க மன்றம் தமிழ் மொழி மூலமான நாடக விழாவை முதற் தடவையாக யாழில் நடத்துகிற போது அதற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.