சிறுவர்கள் தொடர்பில் செய்திகளை அறிக்கையிடும்போது அதிக கவனம் தேவை

162 0

சிறுவர்களின் தவறான முடிவுகள் தொடர்பில் செய்திகளை அறிக்கையிடும்போதும், அது தொடர்பான கடிதங்கள், சுய விபரங்கள், புகைப்படங்களை வெளியிடும்போதும் அவை ஏனையவர்களின் மனதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (20.10.2023) இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்திக் குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு மேலும், அவர் கருத்துத் தெரிவிக்கையில்,தற்போதைய காலகட்டத்தில் பரீட்சைகளின் நிறைவில் மாணவர்களுக்கும் கல்விக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

இதனால் ஒன்றுமில்லாத நிலையில் மாணவர்கள் இருப்பதனால் பாரிய தாக்கங்கள் அவர்களது மனதில் ஏற்படுகின்றன.

இவ் விடுமுறையினை சில பெற்றோர்கள் பயனுள்ளமுறையில் தம் பிள்ளைகளை வழிப்படுத்துகின்றனர்.

 

ஆயினும் இவ் வசதிவாய்ப்புக்கள் எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை.

அரச கற்கை நிலையங்கள் ஊடாக குறுகிய கால கற்கைநெறிகளை வடிவமைத்து அவர்களை உள்வாங்க வேண்டும். மேலும் விளையாட்டுத் துறையில் சகல பெற்றோர்களும் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தவேண்டும்.

இது அனைவருக்கும் பொருந்தக்கூடியதொன்றாகும். இதனூடாகவே தோல்வி – வெற்றி மனப்பாங்கினூடாக மன வலிமையை ஏற்படுத்த முடியும். ஆரோக்கியமுள்ளவர்களாகவும் மாற்றமுடியும்.

தவறான முடிவுகள் தொடர்பாக செய்திகளை சமூக ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும். குறிப்பாக தவறான முடிவால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது கடிதங்கள், சுய விபரங்கள், புகைப்படங்களை வெளியிடும்போது அவை ஏனையவர்களின் மனதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

 

சமூக ஊடகங்கள் சமூக முன்னேற்றங்களிற்கு அளப்பரிய பங்காற்றி வருகின்ற போதிலும், இது போன்ற செய்தி அறிக்கையிடல்கள் சமூகத்திற்கு எத்தகைய பணியை வழங்குகின்றன என்பதை நினைவிற்கொண்டு அறிக்கையிட வேண்டும்.

இது தொடர்பில் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.