வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு

104 0

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அடுத்ததாக ஹர்த்தாலை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (06) நல்லூரில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற சந்திப்புக்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி,ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூடி இந்த முடிவை எடுத்தனர்.

இதன்படி, எதிர்வரும் வாரத்தில் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 9ம் திகதி முல்லைத்தீவில் நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றம் முன்பாக வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் மற்றும் தென்னிலங்கை சட்டத்தரணிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் ஹர்த்தாலை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தாலை முன்னெடுக்கப்படவுள்ள திகதி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.