திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள்  ஆய்வு – விகாரை அமைக்கும் முயற்சி ??

146 0

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா – குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னாள்  உறுப்பினர் ஒருவரின்  கவனத்திற்கு இதனை கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் குறித்த இடத்துக்கு சென்ற முன்னாள்  நகரசபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்,

இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காகவா அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்காகவா ?அல்லது ஏதேனும் மதம் சார்ந்த வணக்கஸ்தலங்களை அமைப்பதற்காகவா ? வந்து செல்கின்றார்கள் என்ற சந்தேகம் பரவலாக மக்களை பீதிக்குள்ளாக்கியது.

உடனடியாக களத்திற்கு சென்ற நான் பொலீசாருக்கும் அறிவித்ததோடு 119 எனும் அவசர போலீஸ் முறைப்பாடு சேவைக்கும் அறிவித்ததோடு பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், சூரங்கல் இராணுவ முகாம் போன்றவற்றிற்கும் தகவல்களை வழங்கி அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை எனக்கு அறிய தாருங்கள் என கேட்டுக் கொண்டேன்.

நாடெங்கிலும் தமிழ் பேசும் சமூகம் வாழுகின்ற இடங்களில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் போன்று அல்லது கடந்த கால அனுபவங்கள் போன்று இக் கிண்ணியாவிலும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந் நடவடிக்கை என்னால் எடுக்கப்பட்டது என மேலும் தெரிவித்தார்.

 

இருந்த போதிலும் குறியீடு இணையத்தின் செய்தியாளர் இது தொடர்பில் ஆராய்ந்ததில் குறித்த பகுதியில் காணிகளை அபகரித்து விகாரை அமைக்கும் நோக்குடனேயே பௌத்த பிக்குகள் குழு அப்பகுதிக்கு சென்றுள்ளதாக அறியமுடிந்தது.