கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கும் கணக்காய்வு அறிக்கைகளில் 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த அறிக்கைகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. அதனால் இந்த அறிக்கைகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து சட்டமா அதிபருக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கணக்காய்வாளர் நாயகம் இதுவரை 10 கணக்காய்வு அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கைகளில் நாட்டுக்கு 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆனால் இந்த அறிக்கைகள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறி்க்கைகள் குறித்த பாராளுமன்ற குழுவுக்கு அனுப்பி அங்கு ஆராய்ந்த பின்னர் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு நாங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது எதிர்க்கட்சித்தலைவரின் யோசனைக்கமைய பிரேரணை ஒன்றை கொண்டுவந்திருந்தோம்.
அத்துடன் 20கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த நட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சீனி மோசடியில் 15கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தோம். ஒனறும் இல்லை. அதனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு சபைமுதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜந்த பதிலளிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தினால் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கும் அறிக்கைகளை கோப் குழுவுக்கு அனுப்பி, அங்கு தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதன் பின்னர் அதனை சட்டமா அதிபருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

