யேர்மனி நெற்றெற்ரால் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

412 0

யேர்மனி நெற்றெற்ரால் (Nettetal) நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களதும் 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நிகழ்வானது 30.09.2023 சனிக்கிழமை அன்று யேர்மனி நெற்றெற்ரால் நகரில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரினை மத்தியமாநிலம் 1 இன் பொறுப்பாளர் திரு சின்னையா நாகேஸ்வரன் ஏற்றிவைக்கத் தமிழீழத் தேசியக்கொடியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன் இரட்ணராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கான ஈகைச்சுடரினை 23.11.1991 ஆம் ஆண்டு மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ஆம் லெப்.மாரியாச்சி என்றழைக்கப்படும் அருள்மொழி குணசிங்கம் அவர்களின் சகோதரி திருமதி.தேன்மொழி சிறிகாந்தன் ஏற்றிவைத்தார். தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களுக்கான ஈகைச்சுடரினை 15.01.1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். ஞானம் என்றழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் சண்முகசுந்தரம் அவர்களின் சகோதரர் திரு லோகேஸ்வரன் அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு தமிழாலய ஆசிரியை திருமதி சுதா அவர்கள் மலர்மாலையை அணிவிக்க, கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு வியர்சென் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு.கோ.கேதீஸ்வரன் அவர்கள் அணிவித்தார் தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இவ்வெழுச்சி நிகழ்வில் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனங்கள் மற்றும் நாடகம் என்பன இடம்பெற்றதுடன் காலத்திற்கேற்ப சிறப்புரையும் இடம்பெற்றது. 12 நாட்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
தமிழீழ மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி