இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு நிலையான பொருளாதார மீட்சியை நோக்கி பிரவேசிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இலங்கையின் சுயாதீனம், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து சீனாவின் செயற்பாடுகள் அமையும் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென்ஹொங் தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் 74 ஆவது தேசிய தினம் வியாழக்கிழமை (28) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென்ஹொங் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,
சீனாவினால் முன்னெடுக்கப்படும் அதிகவேக அபிவிருத்தி பயணத்துக்கு இலங்கை உட்பட சகல நாடுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.சீன ஜனாதிபதி சி சின்பிங்கின் யோசனைக்கு அமைய ‘ஒரு மண்டலம் -ஒரு பாதை’ அபிவிருத்தி செயற்திட்டத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் என்ற அடிப்படையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை,தெற்கு அதிவேக நெடுஞ்சாலை,கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம்,அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகிய பிரதான அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுநிலை வலுப்பெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல தசாப்த காலமாக சிறந்த நட்புறவு காணப்படுகிறது.சகல அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை மக்களிடம் சீனா நட்புறவுடன் செயற்படுகிறது.சீனா இலங்கையில் வெளிப்படைத்தன்மையுடன்,ஸ்திரமான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது.
கடந்த ஆண்டு இலங்கை துரதிஷ்டவசமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது நட்பு நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது.அவசர நிதியுதவியுடன் இலங்கை எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீனாவே முதலாவதாக குறிப்பிட்டது.
இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு நிலையான பொருளாதார மீட்சியை நோக்கி பிரவேசிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.இலங்கைக்கு பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களையே சீனா அமுல்படுத்தியுள்ளது.இலங்கையின் சுயாதீனம்,இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

