அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குக

192 0

அளுத்கம கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கலவரத்தில் பலியானவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தை இழந்தவர்கள் அனைவருக்கும் அரசு உடனடியான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும். கட்சிகள், இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டிய ஒருவிடயமாகவே நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது.

அளுத்கம, பேருவளைக் கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்காமை தொடர்பில் இச்சபையின் கவனத்துக்கு நாம் கொண்டுவர வேண்டும். இதில், மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், 280 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இதுதொடர்பில் அரசு எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

யாழ்ப்பாண சம்பவம், வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், சாலாவ வெடி விபத்து போன்ற பல சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் அளுத்கம, பேருவளை கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் இன்னும் நீதிக்கிடைக்காமை கவலைக்குரியதாகும்.

அளுத்கம, பேருவளை சம்பவங்களை முன்னிறுத்தி முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற இந்த அரசு, இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எனவே, இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் – என்றார்.