கொலைசெய்த குற்றச்சாட்டில் நால்வருக்கு மரண தண்டனை !

52 0

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (11) களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த கொலைக்குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி களுத்துறை, மதினகந்த பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைப் படுகாயப்படுத்தியமை தொடர்பில் 07 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 1, 2, 3 மற்றும் 5 ஆவது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 6 மற்றும் 7 ஆவது பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்தும் மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின் களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.