காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய 6 பேர் கைது

79 0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருட முற்பட்ட குற்றச்சாட்டில் 06 பேர் காங்கேசன்துறை பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகள் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் கடந்த யூலை மாதம் முதல் வாரத்தில் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறினர்.

அதன் பின்னர் அக்காணிகள் இரண்டு மாத காலப்பகுதி கடந்த நிலையிலும் காணி உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாத நிலையில், அப்பிரதேசத்திற்குள் காணி உரிமையாளர் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதனை இரும்பு திருடர்கள் தமக்கு சாதகமா பயன்படுத்தி, அப்பகுதிகளுக்குள் ஊடுருவி வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்டவற்றை திருடி செல்வதுடன், வீடுகளில் காணப்படும் இரும்புகளையும் உடைத்து திருடி செல்கின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.