புதிய ஊழல் தடுப்புச் சட்டம் செப்டெம்பர் 15 முதல் அமுலுக்கு வரும் – நீதி அமைச்சர் விஜயதாச

34 0

புதிய ஊழல் தடுப்புச் சட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமிப்பார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பாக நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை  (07)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு இணங்க புதிய ஊழல் தடுப்பு சட்ட விதிமுறைகளின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புதிய ஆணைக்குழுவிற்கு பொருத்தமான உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊழல் தடுப்புச் சட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வருகின்றது.

இதன் பின்னா், அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமிப்பார். ஆட்சேர்ப்புக்கான அளவுகோல் அரசியலமைப்புச் சபையால் தயாரிக்கப்படும்.

மேலும், தற்போது உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் ஏதேனும் பிழையான தீர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது வாபஸ் பெறப்பட்டாலோ விசாரணை செய்வதற்கு புதிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவானது 29 வருடங்களாக செயற்பட்ட போதிலும் இலஞ்சம் மற்றும் ஊழலும் இந் நாட்டில் ஒழியவில்லை.

எனவே அரசாங்கம் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டமானது பொதுத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், புதிய விதிமுறைகள் தனியார் துறையின் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டாா்.