பாரதியாரின் கொள்ளுப்பேரன் நாளை மட்டக்களப்புக்கு வருகை!

82 0

மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி நாளைய தினம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு வருகைதர இருக்கின்றார்.

செப்டம்பர் மாதம் 11ஆந்திகதி பாரதியாரின் நினைவு நாளாகும்.

இந்நிகழ்வினை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 04ஆந்திகதி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி அவர்கள் வருகைத்தர இருக்கின்றார்கள்.

நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களது தலைமையில் நிகழவிருக்கும் இந்நிகழ்வுக்கு, ஆன்மீக அதிதியாக வணக்கத்துக்குரிய நீலமாதவனானந்தஜீ மஹராஜ் அவர்களும் முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்களும் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் பாரதியாருடைய கவி வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இசையூட்டப்பட்டு இசை ஆற்றுகைகளாகவும் நடன ஆற்றுகைகளாகவும் இடம்பெறக் காத்திருக்கின்றன.

அத்தோடு, அன்றைய நாளில் மஹாகவி பாரதியாருடைய கொள்ளுபேரனாகிய கலாநிதி.இராஜ்குமார் பாரதி அவர்களின் மட்டக்களப்பு வருகையைத் தடம்பதிக்கும் முகமாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி விபுலாநந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.