விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது.
அந்த வகையில் இந்த வருடம் வடமத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுநர் போட்டி யேர்மனி ஆர்ன்ஸ்பேர்க் (Arnsberg) நகரில் 26.8.2023 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் 15 தமிழாலயங்களைச் சேர்ந்த 410 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
எம் மண்ணின் மைந்தர்கள் நினைவாக நடாத்தப்படும் இம் மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் முதல் நிகழ்வாகப் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு பின்பு யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாகத் தாயக விடுதலைக்காக மரணித்த மாவீரர்களையும், கொல்லப்பட்ட மக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதும், தொடந்து வீரர், வீராங்கனைகள் வெற்றிச் சுடரினைக் கைகளில் ஏந்தியவாறு மைதானத்தைச் சுற்றி ஓடிவந்து தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்தபின்னர் போட்டிகள் ஆரம்பமாகின.
முதலாவதாக அணிவகுப்பு இடம்பெற்றது. தங்கள் தமிழாலயக் கொடிகளைத் தாங்கியவாறு நேர்த்தியோடும், கம்பீரத்தோடும், மைதானத்தைச் சுற்றி அணிவகுத்து வந்து தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்திச் சென்றதைப் பார்க்கத் தாயக நினைவுகளை மீட்டுவதாக அமைந்தது.
அணிநடைப் போட்டியில்,
ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை டோட்முன்ட் (Dortmund) தமிழாலயமும் இரண்டாவது இடத்தை வாறன்டோர்வ் (Warendorf)தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை டோட்முன்ட் (Dortmund) தமிழாலயமும் இரண்டாவது இடத்தை வாறன்டோர்வ் (Warendorf) தமிழாலயமும் மூன்றாவது இடத்தை ஆன்ஸ்பேர்க் (Arnsberg) தமிழாலயமும் தமதாக்கிக் கொன்டனர்.
தொடந்து போட்டியாளர்கள், நடுவர்கள் ஆயத்தமாக மற்றைய போட்டிகள் யாவும் ஆரம்பமாகின. பார்வையாளர்கள், பெற்றோர்களின் உற்சாக ஊக்கப்படுத்தலுடன் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடினர். போட்டிகளின் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கான வெற்றிப்பதக்கங்கள் சமநேரத்தில் வழங்கப்பட்டன.
இறுதியாக சிறந்த வீரர், வீராங்கனைகளும், சிறந்த தமிழாலயங்களும் தெரிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் 579 புள்ளிகளைப் பெற்று டோட்முன்ட் (Dortmund) தமிழாலயம் முதலாம் இடத்தையும், 372 புள்ளிகளைப் பெற்று வாறன்டோர்ப் (Warendorf) தமிழாலயம் இரண்டாம் இடத்தையும், 309.5 புள்ளிகளைப் பெற்று ஆன்ஸ்பேர்க் (Arnsberg) தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. இவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
30 போட்டியாளர்களுடன் கலந்துகொண்ட காகன்(Hagen) தமிழாலயம் 169 புள்ளிகளைப் பொற்றதினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடி இறக்கி வைத்ததோடு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப்பாடலுடன் போட்டிகள் இனிதே நிறைவுபெற்றன.
















































































































































