‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!

537 0

ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படவர்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் (30) ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்பவர்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படுகின்றது.

ஈழ தேசத்தில் இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,  நம்பத்தகுந்த சர்வதேசப்பொறிமுறையின் மூலம் தமக்கான நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடன்கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் இப்போராட்டத்தின் ஊடாகத் தாம் வலியுறுத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளகப் பொறிமுறையின் மீது தாம் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை பெற்றுத் தருமாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டி நிற்கின்றனர்.