டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 30 ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

798 0

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம்
5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளுக்கென்று தனித்துவமான வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான “தமிழீழ தேசம்”அதற்காக அவர்கள் வெடிகளைச் சுமந்து சென்று, தமது உயிரைக் கொடையாகக் கொடுத்து வீரவரலாறு படைத்தார்கள். இவர்களின் தியாகத்தை நினைவில் சுமந்து கடந்த 30 ஆண்டுகளாக டென்மார்க் தமிழீழ விளையாட்டு துறையினரால் நாடத்தப்படுகின்ற கரும்புலி கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டப் போட்டி Grindsted நகரில் 26.08.2023 அன்று நடைபெற்றது. இந் நாளின் முதல் நிகழ்வாக டென்மார்க் மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதன் பின்னர் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வை அடுத்து,
டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பினரால் 30 ஆண்டுகளாக, கரும்புலிகள் நினைவு சுமந்து நடாத்தப்படும் இச்சுற்றுப்போட்டியின் முக்கியத்துவத்தையும் மற்றும் அவர்களின் ஈகத்தையும் விளையாட்டு வீரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதை அடுத்து இச்சுற்றுப் போட்டியின் நடைமுறைகளை அணித்தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் பின்னர் போட்டிகள் தொடங்கப்பட்டன.

மேற்பிரிவில் 17 அணிகளும், 16 வயதுக்குற்பட்டோர் பிரிவில் 5 அணிகளும் கலந்து சிறப்பித்த
இச்சுற்றுப் போட்டியில் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடனும் விறுவிறுப்புடனும் போட்டிகளில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக இருந்தது.

மேற்பிரிவில் இறுதியாட்டத்தில் TFC Fredericia White அணியினரை எதிர்த்து போட்டியிட்ட Dantam A அணியினர், தொடர்ந்து மூன்று தடைவைகள் இச்சுற்றுப் போட்டியை வென்று, கரும்புலிகள் சுழல்கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் இந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கழகங்களுக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டன. இறுதியாக” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரக மந்திரத்துடன் இச் சுற்றுபோட்டி நிறைவு பெற்றது.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:

மேற்பிரிவு:
முதலாம் இடம்:
Dantam IF A
இரண்டாம் இடம்:
TFC Fredericia White
மூன்றாம் இடம்:
Dantam IF B

சிறந்த விளையாட்டு வீரன்:
சாருகன் சிவநாதன் Dantam IF A

சிறந்த பந்துக் காப்பாளர்:
பிரதிப் குகதாசன் Dantam IF A

அதிக கோல்களை அடித்தவர்:
ஜெனக்சன் ஜெபநேசன்
TFC Fredericia White

16 வயதுக்குற்பட்டோர்:
முதலாம் இடம்:
OTSC A
இரண்டாம் இடம்:
OTSC B
மூன்றாம் இடம்:
Grindsted TFC

சிறந்த விளையாட்டு வீரன்:
ஜோஸ்சுவா OTSC A

சிறந்த பந்துக் காப்பாளர்:
சுஜிவன் செந்திஸ்வரன் OTSC A