முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

268 0

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு முதலமைச்சர் சந்தித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

இதன்போது முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள் தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவரின் காலில் விழுந்தும் கூம்பிட்டும் கதறி அழுதுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் தங்களின் போராட்டம் நியாயமானது காணாமல் ஆக்கப்ட்டவர்களின் விடயம் தொடர்பில் தான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஜங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ப.அரியரட்னம், பசுபதிபிள்ளை ஆகியோரும் உடனிருந்தனர்.