பிரிட்டனில் 7 குழந்தைகளை வேண்டுமென்றே கொலை செய்தாரென குற்றம் சுமத்தப்பட்ட தாதியான லூசி லெட்பிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரிலுள்ள நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை அளித்தது.
33 வயதான லூசி லெட்பி எனும் இப்பெண், இங்கிலாந்தின் செஸ்டர் நகரிலுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்தியசாலையில் 2011ஆம் ஆண்டு முதல் தாதியாக லூசி லெட்பி பணியாற்றினார்.
2015 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 5 குழந்தைகளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்தைகளையும் பல்வேறு முறைகளில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்தைகளை கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
ஊசி மூலம் காற்றை செலுத்தியும், பலவந்தமாக பால் கொடுத்தும், இன்சுலின் மூலம் நஞ்சூட்டியும் வேண்டுமென்றே அவர் குழந்தைகளை கொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2015, 2016 காலப்பகுதியில் வழக்குத்துக்கு மாறான எண்ணிக்கையில் சிசுக்கள் உயிரிழப்பது மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். மேற்படி சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களில் குறித்த வைத்தியசாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரியவந்தது.
2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகின.
தன்மீதான குற்றச்சாட்டுகளை லூசி லெட்பி நிராகரித்தார். எனினும், 7 சிசுக்களை கொன்றமை, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (18)தெரிவித்துள்ளது.
நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்
அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்தது.
இத்தீர்ப்பின்படி, லூசி லெட்பி ஒருபோதும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்.
“நீர் புரிந்த ஒவ்வொரு குற்றத்துக்காகவும், உமது வாழ்க்கையின் எஞ்சிய காலம் முழுவதும் சிறையில் கழிக்கப்படும்” என நீதிபதி கூறினார்.

