விடுதலைப்புலிகள் காலத்தில், பௌத்த மத வழிபாட்டுக்கு இடையூறு இல்லை! – வடக்கு கிழக்கு பிரதம சங்க நாயக்கர் கருத்து

138 0

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில், பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும், மாறாக பாதுகாப்பே இருந்தது எனவும், அதற்கு காரணம், காவி உடைக்கு தந்த மரியாதை எனவும், வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வௌ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று, தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில், குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பாக, வவுனியா ஸ்ரீபோதி தக்சனாராமய விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

குறுந்தூர் மலை விடயமானது, தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது.

இதனை தனி ஒரு மதம் மட்டும், தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது.
சிங்கள பௌத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது.

ஆனால், இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில், சம்பந்தமே இல்லாமல், சிங்கள பௌத்த கிராமத்திற்குள், கிறிஸ்தவ மத குருவோ அல்லது சைவ பூசகரோ சென்று, தங்கள் தளம் எனக்கூறி உரிமை கொண்டாடினால், சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா?.

அவ்வாறிருக்கும் போது, தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில், பௌத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால், தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது, எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள், எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது.

சிங்கள பௌத்த என்றில்லாமல், நாங்கள் இலங்கையர்கள்.

யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு, நாங்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு சிலர், இந்த விடயத்தை அரசியலாக்கி, இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்.

இவ்வாறான தொல்பொருள் இடத்தின் முழுப்பொறுப்பையும், தொல்பொருள் திணைக்களம் மட்டுமே எடுக்க வேண்டும்.

இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக் கூடாது. என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில், நயினாதீவு ரஜமகா விகாரை விகாராதிபதி கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர்,
உலுக்குளம் விகாராதிபதி சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மௌலவி சதுர்தீன் மௌலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,
கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.