வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

61 0

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை பத்து மணிக்கு இடம்பெற்றது.

விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்றது.

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 4:45க்கு மஞ்சத் திருவிழாவும், செப்ரெம்பர் 04ஆம் திகதி இரவு 7:00க்கு அருணகிரிநாதர் உற்சவமும்,
05 ஆம் திகதி மாலை 4:45க்குக் கார்த்திகை உற்சவமும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 6:45க்கு சூர்யோற்சவமும், 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:45 மணிக்கு சந்தான கோபாலர் உற்சவமும், அன்று மாலை மாலை 4:45 க்குக் கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.

செப்ரெம்பர் 10 திகதி காலை 6:45க்கு கஜாவல்லி – மஹாவல்லி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு வேல் விமானமும், 11 ஆம் திகதி காலை 6:45க்கு மாழ்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 12 ஆம் திகதி மாலை 4:45 க்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

செப்ரெம்பர் 13 திகதி, புதன்கிழமை காலை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

அன்று காலை 6:15க்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

செப்ரெம்பர் 14 திகதி, காலை 6:15க்குத் தீர்தோற்சவமும், 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 4:45 க்கு பூங்காவன உற்சவமும் 16 ஆம் திகதி மாலை 4:45 க்கு வைரவர் சாந்தியும் நடைபெறவுள்ளன.

உற்சவத்தை முன்னிட்டு நேற்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஆலயத்தை சூழவுள்ள யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி, செட்டித்தெரு வீதி ஆகிய வீதிகளின் ஊடான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆலயச் சுற்றாடலில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.