பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!

86 0

பசறை, கோணக்கலை பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சனிக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 56 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை கோணக்கலை கீழ் பிரிவு VP 16ஆம் இலக்கமுடைய தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, அவர் பசறை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கே அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.