நோயாளிகளின் விவரங்களையும், புகைப்படங்களையும் ஊடகங்களில் மருத்துவர்கள் வெளியிட்டு விளம்பரம் செய்யக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைகள் குறித்த பல்வேறு செய்திகளை, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் நிர்வாகிகளும், மருத்துவர்களும் பல்வேறு ஊடகங்களில் வெளியிடுகின்றனர். மேலும், ஊடகங்களின் முன்பாக நோயாளிகளை அறிமுகப்படுத்தியும், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்கிக் கூறியும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது மருத்துவ விதிகளுக்குப் புறம்பானது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள விதிகளில் கூறியிருப்பதாவது: மருத்துவத் துறையினர் ஊடகங்கள் மூலம் வெளியிடும் அறிவிப்புகளில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயர், அவர்களுடைய புகைப்படம், வீடியோ பதிவுகளை வெளியிடக் கூடாது. சிறப்பு சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்த விவரங்களை மருத்துவமனை பெயரில் பொதுவாக வெளியிடலாம். ஒரு மருத்துவர், புதிய மருத்துவமனையை தொடங்கும்போதும், மருத்துவமனை இடத்தை மாற்றும்போதும், அதன் செயல்பாடுகள் குறித்து விளம்பரம் செய்யலாம். அதேநேரம், மருத்துவர்களின் பெயர், புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் இடம்பெறக் கூடாது.
தனியார் மருத்துவமனைகள் தங்கள் இணையதளப் பக்கத்தில், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் குறித்த விவரங்கள், அவர்களின் பட்டங்கள் குறித்து குறிப்பிடலாம். ஆனால், எவ்வித சிறப்பு விவரங்களையும் வெளியிடக் கூடாது. மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்களுக்குத் தடையில்லை. இத்தகைய வரைமுறைகளை மீறி செயல்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

