பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்தவரா?

426 0
201607210253072201_Germany-train-attacker-might-have-been-Pakistani_SECVPFஜெர்மனியில் வெர்ஸ்பர்க் நகரில் கடந்த 18-ந் தேதி இரவு பயணிகள் ரெயில் ஒன்று வந்தடைந்தபோது, அதில் பயணம் செய்த 17 வயது வாலிபர் ஒருவர், சக பயணிகள் மீது கோடரி, கத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்றார். ஆனால் அவரை போலீசார் துரத்திச்சென்று சுட்டுக்கொன்றனர்.

அந்த வாலிபர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி என்று தகவல்கள் வெளியாகின. அவர் தங்களது இயக்க வீரர் என்று ஐ.எஸ். இயக்கம் அறிவித்தது. இந்த நிலையில், அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அல்ல, பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஜெர்மனி புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரது அறையில் பாகிஸ்தானை சேர்ந்த ஆவணம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ். இயக்கம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அந்த வாலிபர் பாகிஸ்தானில் பேசக்கூடிய ‘பாஷ்டோ பேச்சு வழக்கில்’ பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஜெர்மனிக்கு கடந்த ஆண்டு வந்தபோது, தன்னை ஆப்கானிஸ்தான் அகதி என்று கூறி நடித்திருக்கக்கூடும் என ஜெர்மனி அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.