யாழ். வண்ணார்பண்ணையில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் உடற்பாகம் மீட்பு

149 0
யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ் போதான வைத்தியசாலை சட்ட வைத்தியஅதிகாரியும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

முதல் கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் இந்து மயானபகுதியில்  புதைக்கப்பட்ட சடலம் விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிந்திய செய்தி

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை  நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,  வியாழக்கிழமை வண்ணார்பண்ணை, ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீடு ஒன்றின் காணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் கோம்பயன் மயானத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் குழி ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குழி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறந்த சிசுக்களை அடக்கம் செய்யும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது குறித்த குழியில் சடலங்கள் போடப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.