வவுனியாவில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது

46 0

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் பொது மக்களை வழிமறித்து நகைகளை திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் நேற்று (07.08.2023) தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்டபட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் பீ.அம்பாவிலவின் வழிகாட்டுதலில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருல்பெல தலைமையிலான பொலிஸாரும், பறையனாலங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கசூன இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சம்பவங்களை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

மேலும், அக்குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குற்றச்செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதில், தம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இருவரும், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் (மருத்துவ சின்னம்) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.