பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நியூசிலாந்து ஆய்வுப் பயணத்துக்கு அரச நிதி பயன்படுத்தப்படவில்லை

140 0
இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் நியூசிலாந்து ஆய்வுப் பயணத்துக்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இந்த ஆய்வுப் பயணம் இரண்டரை வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் இந்நாட்டுப் பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றி வருவதாகவும், இந்தப் பணிகளை மேலும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என குஷானி ரோஹனதீர மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உறுப்பினர்கள் அனைவரும் பொதுவான இலக்குகளுக்காக ஒன்றுபட்டு அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் பொதுவான இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.