வெளியாகியது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் தமிழில் உரையாடிய காணொளி

265 0

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்கதல் நடத்திய அன்றையதினம் தாக்குதலுக்கு முன்னர் தமிழில் உரையாற்றியதாகக் கூறப்படும் காணொலி ஒன்றை, கலாநிதி றொஹான் குணரட்ன வெளியிட்டுள்ளார்.
‘உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உள்ளகத் தகவல்கள்’ என்ற நூல் ஒன்றை தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள கலாநிதி
றொஹான் குணரட்ன, சுமார் 30 நிமிட காணொலி ஒன்றையும் அதனுடன் வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடும் வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்துகொண்ட கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
நாட்டின் 3 தேவாலயங்கள், கொழும்பின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என 7 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தன.
இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், இலங்கை அரசு அறிவித்தது.
2019 ஏப்ரல் 23 அன்று, இஸ்லாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது.

தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.