பேலியகொடை, மெனிங் பொதுச் சந்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் புதன்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட, மெனிங் பொதுச் சந்தையிலுள்ள கடைத்தொகுதிகளை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வர்த்தக சங்கம் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்ததுடன், அதற்கு நீதிமன்றமும் செவ்வாய்க்கிழமை (25) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவை மீறி இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட பொருளாதார மத்திய நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நிலையங்களில் உள்ள வர்த்தகர்களுக்கு பேலியகொடை, மெனிங் சந்தையிலுள்ள கடைகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என பேலியகொடை பொலிஸார் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தடையுத்தரவைக் கருத்திற்கொள்ளாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் செயல்படும் இயலுமை இருப்பதாக மெனிங் சந்தை தொழிற்சங்களுக்கு தெரியப்படுத்தியது.
மேலும், குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுறுத்தினர்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

