மட்டக்களப்பு அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது விலகிச் செல்கின்றமை கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.சிவானந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 22 நாளாகவும் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.
மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் ஆதரவினை முழுமையாக வழங்கிவரும் நிலையில், அரசியல்வாதிகளினால் போதிய ஆதரவு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தேர்தல் காலங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதிகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, பாராமுகமாக இருப்பதாகவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.