யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (15.08.2023) தனுஷ்கோடியில் தஞ்சமடைவார்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து அகதிகளாகத் தொடர்ந்து தனுஷ்கோடி சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் காலை தனுஷ்கோடிக்கு 8 பேர் அகதிகளாகச் சென்றுள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸ் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸ் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற பொலிஸார், குறித்த 8 பேரையும் பாதுகாப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான வசதிகளை அகதிகள் முகாமில் உள்ள அலுவலர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

