மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழகம் அமைய இந்தியா உதவ வேண்டும்

142 0

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும்.

அடுத்த வாரம் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகிறோம். ஜனாதிபதி ரணில் எமக்களித்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவாரென நம்புகிறோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும்

மலையகம்-200 நினைவுகூரல் தொடர்பிலும் இந்தியாவின் பங்களிப்பு அமைய வேண்டும்.

இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம்-200 நினைவுகூரப்படும் நிகழ்வுகள் பற்றி உரையாடி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம்.

இந்நிலையில், அடுத்த வாரம் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகிறோம்.

எமது மக்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் இந்திய மத்திய அரசை நாம் நம்பியுள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களது பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.

இந்த பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோன்று தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எமது பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாக கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் நமது மக்கள்  தொடர்பில் தமக்குள்ள தார்மீக கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.

அதேவேளை, இலங்கையில் உள்ள மலையக தமிழர்களது தேசிய அரசியல் அபிலாஷைகள், கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம்.

அதிகாரபூர்வ அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தை குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.