தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பருத்தியின் விலை நடப்பு அறுவடைப் பருவத்தில், கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
பருத்தி விலை சரிவு: கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் பருத்தியை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடிந்தது. அதனால் உற்சாகமடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியைத் தேர்வு செய்தனர். இந்நிலையில், தற்போது பருத்தியின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 என கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

