குருந்தூர் மலை விவகாரம்: பதிலறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

143 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில்  முறையீடு செய்யப்பட்ட  வழக்கு இரண்டாவது தடவையாக    முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  குருந்தூர் மலைக்குச் சென்று நிலமைகளை கள ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.

12.06.2022 அன்று இருந்த சூழ்நிலையினை பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறி அந்த இடத்தில் மேம்படுத்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அது தொடர்பில்   நீதவான் குருந்தூர் மலைப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெற்றுள்ள விடையங்களை குறிப்பெடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதில் அறிக்கை வழங்குவதற்காக பொலிஸாருக்கும் தொல்லியல் திணைக்கத்துக்கும் திகதி வழங்கப்பட்டுள்ளது 08.08.2023 அன்று  அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்ய திகதியிடப்பட்டுள்ளது அறிக்கையின் பிற்பாடு அதுதொடர்பிலான கட்டளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்படும் என்று சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பில் முத்த சட்டத்தரணியான கே.எஸ்.ரண்டவேல், தனஞ்செயன் மற்றும் மாவட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையானதுடன் குருந்தூர் மலைக்கு சென்றும் பார்வையிட்டு உண்மைத்தன்மையினை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,மற்றும் முன்னாள வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்கள பதில் பணிப்பாளர் உள்ளிட்ட அரச சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத்வீரசேகர மற்றும் பௌத்த மதகுருமார்கள் பெரும்பான்னை மக்கள் என பலர் குருந்தூர் மலையில் பிரச்சனமாகி  இருந்தமை குறிப்பிடத்தக்கது.