ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள்

130 0

ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என  அப்பகுதி மக்கள் தொடர்ந்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப் போதித்தாலும், நாங்கள் செவிமடுப்பதாக இல்லை. நாங்களே இயற்கையை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையை தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம்.

நிலத்துக்கு நீரை பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ள வாய்க்கால்களை கூட விட்டுவைக்காமல் கம்பள வீதிகளாக்கியும், சதுப்பு நிலங்களை குடியிருப்புகளாக்கியும் இயற்கையை எமக்கு ஏற்ற வகையில் கட்டமைத்து வருகிறோம்.

தற்போதைய மனிதனை விட புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின்போது எதிர்காலத்தில் தோன்றினாலும், அவனாலும் கூட இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது.

இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும். இதனை நன்கறிந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், தமது ஆதிக்கம் பெற்ற காலப்பகுதியில் இயற்கையை பாதுகாப்பதற்கான பல்வேறு வழிவகைகளை கையாளப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமன்றி, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களெங்கும் குறிப்பாக காடுகளை அழிப்பதை விடுத்து காடுகளை வளர்த்து வந்தனர். அதுமாத்திரமின்றி, இயற்கைக்கு  பாதகமான பல்வேறு விடயங்களுக்கான மாற்று வழிமுறைகளை கையாண்டனர்.

இவ்வாறான பின்னணியில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து, 14 ஆண்டுகளை கடந்துவிட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை  யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான ஒரு விடயம்.

இன்றைய சூழலில் இயற்கையை அழிப்பதற்கு பலர் முண்டியடிக்கின்றனர். மாறாக, இயற்கையை பாதுகாப்பதற்காக சட்டம் சார்ந்தவர்களோ மக்களோ முன்வரவில்லை என்பதே இயற்கையை நேசிக்கின்ற பலரின் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

குறித்த மாவட்டத்தை பொறுத்தவரையில், கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, மணல் அகழ்வு, காடழிப்பு என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. அபிவிருத்தி என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருப்பினும், இந்த அபிவிருத்தி பணிகளுக்காக முறைகேடாக இடம்பெறும் இயற்கை வள சுரண்டல்கள் மக்களை பாரிய இயற்கை அனர்த்தங்களுக்குள் கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வகைதொகையின்றி இடம்பெறும்  கருங்கல் அகழ்வு நடவடிக்கை காரணமாக பாரிய சூழல் பிரச்சினைக்கு அப்பகுதி மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அப்பகுதியில் இடம்பெறுகின்ற கருங்கல் அகழ்வினால் பாரியளவில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரியளவில் காடுகளும் அழிக்கப்படுகின்றன. அதேவேளை, குறிப்பிட்ட இடத்தில் உரிய நிபந்தனைகளை மீறி, வெடி மருந்துகள் பிரயோகிக்கப்படுவதால்  ஏற்படும் வெடிப்புச் சம்பவங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள்  பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், கருங்கல் அகழ்ந்தெடுக்கப்படும்  இடத்தினை அண்டிய பகுதிகள் விவசாய கிராமங்களாக உள்ளன. இந்நிலையில், அதிகளவான ஆழத்தில் கிடங்குகள் தோண்டப்படுவதனால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் வற்றிப்போகின்றன. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கைகளோடு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், வனவள பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு  அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் தொடர்புகொண்டிருக்கின்றன. இவற்றோடு தொடர்புடைய அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு நாட்களை கடத்துகின்றனரே ஒழிய, கருங்கல் அகழ்வினால் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும்  ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இரண்டு நிறுவனங்கள் சட்ட விரோதமாக கருங்கல் அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி அவை, அப்பகுதிகளில் பாரியளவில் குழிகளை தோண்டி, கருங்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்தபோதும், இன்று வரை இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஈழத் தமிழர் வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­ய,  பிரசித்தி பெற்ற ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யம் அமைந்துள்ள வாவெட்டி மலை இந்த கருங்கல் அகழ்வினால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என அப்பிர­தேச மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர்.

தொல்­பொருள் வல­ய­மாக காணப்­படும் இந்த மலையில் பாரியளவில் கருங்கல் அகழ்வு இடம்­பெறுகின்றன.

தமிழர்களின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை அண்மித்த பிரதேசத்தில் கருங்கல் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவது தெரிந்தும், கருங்கல் அகழ்வுப் பணிகளால் தொல்பொருள் சான்றுகளுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய  நிலைமை காணப்படுவதை அறிந்தும் தொல்பொருள் திணைக்களத்தினரும் கருங்கல் அகழ்வு நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள்.

குறிப்பாக, கருங்கல் அகழ்வு தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தாலும், இதற்கு இன்று வரை  தீர்வுகள் எட்டப்படவில்லை.

இக்கருங்கல் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அதனை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாரியதொரு பிரச்சினை நேரக்கூடும். எனவே, ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெறும் கருங்கல் அகழ்வு விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது அப்பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சண்முகம் தவசீலன்