5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு தீர்மானம்

159 0
image
நாடளாவிய ரீதியில் 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களுடன் தொடர்புடைய மூன்று மொழிகளிலிருந்தும் இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடளாவிய 35 வயதை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களுடன் தொடர்புடைய மூன்று மொழிகளிலிருந்தும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன்  7,500 பயிற்சி பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாளை புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் பௌதீக வளங்களையும், மனித வளங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது.

அதற்கு மாணவர்களின் ஒழுக்கம் இன்றியமையாதது. சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் மோசமான நடத்தைகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.

புதிய தலைமுறையினரிடையே ஒழுக்கமற்ற நடத்தைகளை, மத நோக்குநிலை மற்றும் புரிதலில் மாற்றுவதன் மூலம்  இவற்றை இல்லாமல் செய்யலாம்.

பாடசாலை நிர்வாகத்திற்குள் அதிபருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் முறையற்ற தலையீடுகள் பொருத்தமற்றது.

இவ்வாறான விடயங்களை  ஏற்றுக் கொள்ள  முடியாது என  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.