ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான தம் மீது சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று (14.06.2023) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த வழக்கில் முன்னிலையாவதற்கு நீதிமன்றிற்கு வந்திருந்தோம்.
மீண்டும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியிருக்கின்ற காரணத்தினால் அடுத்த வழக்கிற்கு ஒரு திகதி இடப்பட்டுள்ளது.
இந்த கைதுகள் அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடைய, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டுகிறது.
இத்தகைய சட்டவிரோத கைதுகளுக்கு அஞ்சி, எங்களுடைய உரிமைப் போராட்டத்தை அடக்கலாம் என்று அரசாங்கமோ அல்லது அரச இயந்திரங்களோ நினைக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது அவரது வருகைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வழக்கானது 10.10.2023 அன்று திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

