காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையே நேற்று இரவு கடுமையான வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளதினால் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 6ம் குறிச்சி கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக நேற்றிரவு மாநாடொன்று நடைபெற இருந்த நிலையிலே இவ்வாறு 2 குழுக்களிடையே மோதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதலில் வாள்வெட்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.
இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 25 வயது இளைஞர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வீச்சுக்கு இலக்கான 36 வயதான நபரொருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இம் மோதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக விரைவில் இம் மோதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.