யாழில் கைத்தொலைபேசிகளை திருடும் கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கைது

64 0

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பஸ்களில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து கைத்தொலைபேசிகளை திருடும் கும்பலைச் சேர்ந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து  திருடப்பட்ட 9 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், திருடிய  கைத்தொலைபேசிகளை வாங்கிய நால்வரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் மானிப்பாய் வீதியில் பயணிக்கும் பஸ்களில் பயணம் செய்யும் வயது முதிர்ந்தவர்கள் பெண்களின் கைத்தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான முறையில் திருடி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்  மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.