சீனாவில் ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி நொறுங்கியது: 5 பேர் உயிரிழப்பு

377 0

201607201750396298_Five-killed-in-amphibian-plane-accident-in-Shanghai_SECVPFசீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். சீனாவின் அரசு விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி.ஐ.சி. ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம், நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமான சேவையை தொடங்க திட்டமிட்டது. இதன் சோதனை ஓட்டம் முடிந்து கிழக்கு சீனாவில் இந்த விமான சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, முதல் ஆம்பிபியன் விமானம் ஷாங்காயின் ஜின்ஷான் மாவட்டத்தில் இருந்து ஜெஜியாங் மாகாணம் ஜோஷான் நகருக்கு இன்று புறப்பட்டது. 10 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் சிறிது நேரத்தில் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோதி நொறுங்கியது. விமானத்தின் முன்பகுதி பாலத்திலும், பின்பகுதி தண்ணீருக்குள்ளும் இருந்தது.

விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து காயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி வெளியிட்டுள்ளது.