உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்

77 0

உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஆறு மாதத்துக்கு பின்னர் சகல தனியார் ஊடகங்களின் அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும்.

ஒருவருட காலத்தை வரையறுத்த வகையில் அனுமதி பத்திரம் வழங்கப்படும். அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும். இதுவா ஜனநாயகம்? உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் இலங்கையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை கருதப்படுகிறது. அரசியலமைப்பின் 14 ஆவது அத்தியாயத்தில் பேச்சு சுதந்திரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்கும் விசேட பொறிமுறையாக ஊடகம் காணப்படுகிறது. ஊடக துறையின் சுதந்திரத்தை வரையறை செய்து விட்டு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை ஒருபோதும் பாதுகாக்க முடியாது.

உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை சட்டமாக்க இடமளித்தால் ஊடகத்துறையின் சுதந்திரம் அத்துடன் நிறைவு பெறும். ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார  சபை என்பது ஒரு யோசனையே தவிர சட்டமூலம் அல்ல என்று அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். தனியார் மற்றும் சமூக ஊடகங்களை இலக்காகக் கொண்டு உத்தேச சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச ஒலி மற்றும் ஒளிப்பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தில் 37 சட்ட அத்தியாயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஊடக சுதந்திரம் இந்த சட்டமூலத்தின் ஊடாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.பிரபல்யமான ஊடக நிறுவனங்களில் பெரும்பாலானவை தனியார் தரப்புக்கு சொந்தமானது.

ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளன.அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளை ஊடகங்களே வெளிக்கொண்டு வருகின்றன. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஊடாகவே ஊடகங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளன. 1966 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைய  ஊடகங்கள் இதுவரை வினைத்திற்காக செயற்படுகின்றன.

உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் சுதந்திரம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதகாலத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரம் முழுமையாக இரத்து செய்யப்படும். அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த ஊடகம் செயற்படுமாயின் அது சட்டத்துக்கு விரோத செயற்படாக கருதப்படும்.அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு செயற்பட முடியாது.

இந்த சட்டம் இயற்றப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் மீண்டும் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.அரசாங்கத்தின் கண்காணிப்பின் பின்னரே அனுமதி பத்திரம் வழங்கப்படும்.ஒருவருட காலத்தை வரையறுத்த வகையில் மாத்திரம் அனுமதி பத்திரம் வழங்கப்படும்.

அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க ஒன்பது மாதத்துக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்க வேண்டுமா? இல்லையா என்பதை உத்தேசிக்கப்பட்டுள்ள அதிகார சபையே தீர்மானிக்க முடியும். அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஊடகங்களுக்கு மாத்திரமே அவ்வாறாயின் அனுமதி பத்திரம் வழங்கப்படும். இதுவா ஜனநாயகம்?.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெயரளவில் மாத்திரமே ஜனநாயகத்தை பாதுகாப்பார். மறைமுகமான வகையில் ஜனநாயகத்துக்கு எதிராகவே செயற்படுவார். உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.