உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதில் அதிகளவான சிரத்தையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர் ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவை தயாரிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுவதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பாக பரந்துபட்ட கலந்துரையா டல்களை நடத்தி அனைவரின் கருத்துகளையும் உள்ளீர்க்கவுள்ளோம். தொடர்ந்து பூரணமான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்தச் செயல்பாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வாகனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலிவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதிவாதியான திலினி பிரியமாலி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் நோய் நிலை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக மன்றில் அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையுடன் பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் வாகனம் ஒன்றை பெற்று தருவதாக கூறி, அவரிடம் 80 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு அதனை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

