கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை பயன்படுத்தியவர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர்

96 0

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் ஒட்டுமொத்த மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்கள்.

ஆகவே நாட்டு மக்கள்  குறிப்பாக பௌத்தர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் 81 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (29) பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் உள்ள மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற்ற மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை இலக்காக கொண்டு வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.கருத்து சுதந்திரத்தை அடிப்படை மனித உரிமைகளுக்குள் வரையறுத்துக் கொண்டால் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறாது. அரசியலமைப்பினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக விரும்பிய அனைத்தையும் பேச முடியாது.

2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களை ஆட்சிக்கு கொண்டுவர புத்தசாசனம் மற்றும் பௌத்த மதம் பிரதான கருவியாக பயன்படுத்தப்பட்டது.பௌத்த மதத்துக்கு பாதிப்பு என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்கள்கள் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் இல்லாதொழித்துள்ளார்கள்.

ராஜபக்ஷர்களின் தவறான நிர்வாகத்தினால் ஒட்டுமொத்த பௌத்தர்களும் பாதி;க்கப்பட்டுள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தியவர்கள் தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் குறிப்பாக பௌத்தர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் ஒட்டுமொத்த மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர்கள் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுவது ஆச்சரியத்துக்குரியது.