சிங்களவர்களை அழிக்க முன்னெடுக்கும் சதியே தம்புள்ளை சம்பவம்- ஞானசார தேரர்

237 0

நாடு முழுவதிலும் இடம்பெற்று வரும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு என்பன எதேட்சையாக நடைபெறும் ஒன்று அல்லவெனவும், நன்கு திட்டமிட்ட அடிப்படையில்  தந்திமான முறையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நடவடிக்கை எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இனமான சிங்களவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வெளிநாட்டு உதவிகளை பெறும் அரச சார்பற்ற அமைப்புக்கள் இரண்டு இந்த நடவடிக்கையை வழிநடாத்தி வருவதாகவும் தேரர் குற்றம்சாட்டினார்.

இந்த இரண்டு அமைப்புக்களையும் தடை செய்யுமாறு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தை தாம் வலியுறுத்தி வருவதாகவும் தேரர் குறிப்பிட்டார். தம்புள்ள சம்பவத்தை மாத்திரம் தனியாகப் பார்க்காமல் இந்த சதி முயற்சியை வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்தைக் கோருகின்றோம் எனவும் கிருளப்பனையில் அவ்வமைப்பின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தம்புள்ளை வைத்தியசாலையில் பிள்ளை பேறுக்காக வரும் தாய்மாரை அங்குள்ள மகப்பேற்று வைத்தியர் ஒருவர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வற்புறுத்துவதாக அண்மையில் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.