மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விசேட நடமாடும் சேவை

62 0

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (27) காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விசேட நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்ட அகதிகள் ஆகியோர் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ஆகிய அமைச்சுக்கள், ஆட்பதிவு, குடிவரவு குடியகல்வு, தலைமைப் பதிவாளர் ஆகிய திணைக்களங்கள், மாகாண காணி ஆணையாளர், காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு என்பன கலந்துகொள்ளவுள்ளன.

இந்த நடமாடும் சேவையின் ஊடாக குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பதிவு செய்தல், அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளல், திருத்தியமைத்தல் மற்றும் காணாமல்போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குவதிலும், அவற்றை பெறுவதிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

மேலும், காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணுதல், இழப்பீடுகளுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை பூர்த்தி செய்தல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்துதல் மற்றும் அவ்விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல், காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை குறித்த விழிப்புணர்வு, சட்ட ஆலோசனை மற்றும் ஆலோசனை முகாமினை நடத்துதல் போன்ற சேவைகளை இதனூடாக பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவைக்கு ஐக்கிய அமெரிக்காவின் உதவிகள் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.