உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ரோசி நியமனம்

47 0

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக அமைச்சுப்பதவிகள் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2001 – 2004 வரை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பதவி வகித்த ரோசி சேனாநாயக்க, 2009 – 2010 காலப்பகுதியில் மேல் மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

சிறுவர் விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராக 2015 இல் பதவி வகித்த அவர், பிரதமரின் பேச்சாளராகவும், பிரதமர் அலுவலக பிரதானியாகவும் பதவி வகித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளராக ஆரம்ப காலங்களில் காணப்பட்ட ரோசி சேனாநாயக்க 1980இல் இலங்கை அழகு ராணியாகவும் , 1984 இல் திருமணமான உலக அழகியாகவும் மகுடம் சூடியவராவார்.

பின் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர் 2018 உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.