ஏக மனதாக என்னை தெரிவுசெய்தால் தமிழரசு கட்சியின் தலைமையினை ஏற்க தயார்!

59 0
அனைவரும் ஏக மனதாக தெரிவுசெய்தால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையினை ஏற்க தயாராக உள்ளேன் என தமிழரசு கட்சியின் மூத்த துணை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் தலைமை விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

என்னை பொறுத்தவரை நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை. முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏக மனதாக தெரிவுசெய்தால், போட்டியில்லாமல் அனைவரும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தெரிவுசெய்தால் தலைமையினை நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.

ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவுசெய்யப்பட்டால், அந்த கடமையினை செய்யக்கூடிய ஆற்றல், பொறுப்பு எனக்கு ஏற்பட்டுவிடும். அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்தோ பதவிக்கு வர விரும்பவில்லை.

தலைமைக்கு தகுதியுடையவர் என என்னை பலர் கேட்கின்றார்கள், சொல்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் கூட, எங்களுடைய கட்சி ஒற்றுமையாக இயங்க வேண்டும். ஒருமனதாக போக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. அவ்வாறான இணக்கப்பாடு வந்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்றார்